குடிபோதையில் ஹோட்டல் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மலையாள நடிகர் விநாயகனை கேரளா போலீசார் கைது செய்தார்கள். விநாயகன் குடிபோதையில் ரகளை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் விநாயகனின் வீடியோவும் வெளியாகியிருக்கிறது.

கேரளாவை சேர்ந்தவர் விநாயகன். மலையாளம் தவிர்த்து தமிழ், தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான ஜெயிலர் படத்தில் வர்மன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதில் இருந்து ஜெயிலர் விநாயகன் என அவரை தமிழ் சினிமா ரசிகர்கள் அழைக்கிறார்கள். அவர் படப்பிடிப்புக்காக கேரள மாநிலம் கொல்லம் Anchalummoodu பகுதியில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் மே 2ம் தேதி முதல் தங்கியிருந்தார். நேற்று ஹோட்டலை காலி செய்திருக்கிறார்.
அப்பொழுது செக்அவுட் செய்வதற்கான ஃபார்மாலிட்டிகளை விநாயகன் செய்யவில்லையாம். இதையடுத்து அவரிடம் ஹோட்டல் ஊழியர்கள் பேசவே விநாயகன் கோபப்பட்டு ரகளை செய்திருக்கிறார்.இதையடுத்து ஹோட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள்.
தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து விநாயகனை கைது செய்து மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அதன் பிறகு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்குப்பதிவு செய்தார்கள். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
காவல் நிலையத்தில் அவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோவும், ஹோட்டல் ஊழியர்களை விளாசிய வீடியோவும் வெளியானது.
விநாயகன் மது அருந்திவிட்டு போலீசார் உள்பட அனைவரையும் திட்டினார் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விநாயகன் இப்படி ரகளை செய்வது இது ஒன்றும் முதல் முறை அல்ல. முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொச்சியில் இருந்து கோவாவுக்கு பயணம் செய்தபோது விமான நிலையத்தில் பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். குடிபோதையில் தான் வாக்குவாதம் செய்தார் என்று தகவல் வெளியானது. கடந்த ஜனவரி மாதம் குடிபோதையில் தன் பக்கத்து வீட்டுக்காரரை விநாயகன் திட்டிய வீடியோ வெளியாகி வைரலானது.
தற்போது அவர் ஹோட்டல் ஊழியர்களை திட்டிய வீடியோவை பார்த்தவர்களோ இந்த விநாயகன் என்ன எப்பொழுது பார்த்தாலும் குடித்துவிட்டு ரகளை செய்கிறார் என்கிறார்கள். சிறந்த நடிகருக்கான கேரள அரசு விருதை பெற்ற விநாயகனின் நடிப்பை யாரும் குறை சொல்லவில்லை. ஆனால் அவர் இப்படி தொடர்ந்து ரகளை செய்து கைதாவது சினிமா ரசிகர்களை விவாதிக்க வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் : TAMILSAMAYAM
