சிவகாசி அருகேயுள்ள சித்துராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (40). இவர் தனியார் காகித ஆலையில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று (ஜூலை 23) மாலை பணி முடிந்து வீட்டிற்கு வந்தபோது ஜக்கம்மாள் கோவில் அருகே நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த மருதுபாண்டி (22), செல்வம் உள்ளிட்ட எட்டு பேர் கொண்ட கும்பல் சந்திரசேகரனை வழிமறித்து அவரிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளனர்.
சந்திரசேகரன் தன்னிடம் பணம் இல்லை என பணம் கொடுக்க மறுத்ததால் அவரிடம் தகராறில் ஈடுபட்ட கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. மேலும் கும்பலிடமிருந்து தப்பிச் சென்ற சந்திரசேகரன் தனது வீட்டிற்குள் சென்று கதவை பூட்டியுள்ளார். வீட்டிற்குள் சென்ற சந்திரசேகரன் காவல் துறையின் அவசர அழைப்பு எண் 100க்கு அழைத்துள்ளார்.
பின்னர் போலீஸ் வருவதைக் கண்டு தப்பி ஓடிய கும்பல் இன்று வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்த சந்திரசேகரனை அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பி ஓடியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த சந்திரசேகரன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மருதுபாண்டி என்பவரை கைது செய்துள்ள போலீசார் மேலும் 7 பேரைத் தேடி வருகின்றனர்.
தகவல் : GETLOKALAPP
