கரூர் மாநகராட்சி பசுபதிபாளையத்தைச் சேர்ந்தவர் கண்ணன், தனியாக வசித்து வருகிறார். இவரும், இவரது நண்பர் காந்திகிராமத்தை சேர்ந்த ஆசைத்தம்பி (38) என்பவரும் சேர்ந்து கண்ணன் வீட்டில் மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். வழக்கம்போல் நேற்று இருவரும் மது அருந்திவிட்டு வீட்டில் உறங்கியுள்ளனர்.
இன்று காலை விழித்து எழுந்து பார்த்தபொழுது ஆசைத்தம்பி மார்பு பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த கண்ணன் அவரது உறவினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் பசுபதிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும், சம்பவ இடத்தில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா மற்றும் மோப்ப நாயுடன் காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து ஆசைத்தம்பி உடலைக் கைப்பற்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, வீட்டிலிருந்த கண்ணனை பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நண்பர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்தக் கொலை நடந்ததா? வேறு பிரச்சனை காரணமா? எனப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை நடந்த இடம் பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தகவல் : GETLOKALAPP
