
‘சென்னை புறநகரில் ஜூலை 26 அன்று நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகளுடன் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளர்; இதில் ஏழு பேர் மாணவர்கள்’ என தாம்பரம் மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
கல்வி நிலையங்களுக்கு அருகில் பெட்டிக் கடை நடத்தி வந்த நபரிடம் இருந்து ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, தாம்பரம் மாநகர காவல் ஆணையர் கூறியுள்ளார்.
‘பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் கஞ்சா சாக்லேட்டுகள் பிடிபடுவது மிக அபாயகரமானது’ என, சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். சென்னை புறநகரில் மாணவர்கள் மத்தியில் போதைப் புழக்கம் அதிகரிக்கிறதா? தொடர் சோதனை நடத்தியும் கட்டுப்படுத்த முடியாதது ஏன்?
தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பொத்தேரி, காட்டாங்குளத்தூர், மறைமலை நகர் ஆகிய பகுதிகளில் கடந்த ஜூலை 26 அன்று மிகப் பெரிய அளவில் சோதனை நடவடிக்கை ஒன்றை காவல்துறை மேற்கொண்டது.
காவல் உதவி ஆணையர், ஐந்து காவல் ஆய்வாளர்கள், 20 காவல் உதவி ஆய்வாளர்கள், 60 காவலர்கள் அடங்கிய பல்வேறு குழுக்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டதாக, தாம்பரம் காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தகவல் : BBC
