Home Uncategorizedகள்ளச்சாராய மரணங்கள் : எஸ்.பி, கலெக்டர் மீது பாய்ந்த நடவடிக்கை – தமிழக அரசு அதிரடி உத்தரவு!

கள்ளச்சாராய மரணங்கள் : எஸ்.பி, கலெக்டர் மீது பாய்ந்த நடவடிக்கை – தமிழக அரசு அதிரடி உத்தரவு!

by bait
0 comments

தமிழ்நாட்டில் கள்ளச் சாராயத்தை தடுக்க அரசே டாஸ்மாக் மூலம் மது விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன் மலை உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் கள்ளச் சாராயம் காய்ச்சும் இடங்களுக்குச் சென்று அங்குள்ள ஊறல்களை அழிக்கும் பணிகளையும் அவ்வப்போது மதுவிலக்கு போலீசார் செய்து வந்தனர்.

இந்த சூழலில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் சிலர் கும்பலாக சென்று கள்ளச்சாராயம் அருந்தியதாகக் கூறப்படுகிறது. இதில், பலருக்கும் அடுத்தடுத்து தலைவலி, வயிற்று வலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டன. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. எனினும், அடுத்தடுத்து பலி எண்ணிக்கை உயர்ந்து தற்போது 10 ஆக மாறியுள்ளது.

கள்ளச்சாராயம் அருந்தி 10 பேர் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கள்ளக்குறிச்சி கருணாபுரம் காலனியைச் சேர்ந்த 26 பேர் வாந்தி, வயிற்றுவலி, வயிற்றெரிச்சல் போன்ற உபாதைகள் இருப்பதாகத் தெரிவித்து கள்ளக்குறிச்சி
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மேற்படி
நபர்கள் பாக்கெட் சாராயத்தை அருந்தியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்களில் பிரவீன்குமார், சுரேஷ், சேகர், வடிவு, கந்தன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இறப்பின் காரணம் உடற்கூராய்விற்கு பின்னர் தெரியவரும். மற்றவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளது.

மருத்துவ சிகிச்சைக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை பட்டியலிட்ட தமிழக அரசு, “பாக்கெட் சாராயம் விற்ற கோவிந்தராஜ் என்கிற கண்ணுகுட்டி என்ற நபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 200 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. சோதனையில், அதில் மெத்தனால் கலந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல்வருக்கு இந்த சம்பவம் பற்றிய தகவல் தெரிய வந்ததுடன், அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோரை உடனடியாக கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு உத்தரவிட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

மேலும், “இச்சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜடாவத் உடனடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக எம்.எஸ்.பிரசாந்த் புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி சமய் சிங் மீனா தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு ரஜத் சதுர்வேதி மாவட்ட எஸ்.பியாக பணியமர்த்தப்பட்டுள்ளார். இவ்வழக்கை தீர விசாரிக்கவும் மேல் நடவடிக்கைக்காகவும் சிபிசிஐடி வசம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார்” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தகவல் : TAMILSAMAYAM

You may also like

Leave a Comment