Home Uncategorizedடாஸ்மாக் வழக்கு : சீல் வைக்க அதிகாரம் இல்லை… நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட அமலாக்கத் துறை

டாஸ்மாக் வழக்கு : சீல் வைக்க அதிகாரம் இல்லை… நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட அமலாக்கத் துறை

by bait
0 comments

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில், வீட்டிற்கு சீல் வைக்க தங்களுக்கு அதிகாரம் இல்லை என அமலாக்கத் துறை ஒப்புக்கொண்டுள்ளது.

டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத் துறை திடீரென சோதனை செய்தது. இதன் முடிவில் டாஸ்மாக் விற்பனையில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக அறிக்கை வெளியிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் , மேற்கொண்டு விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி அளித்தது.

இதனையடுத்து டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் வீட்டில் கடந்த மே மாதம் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதேபோல தொழிலதிபர் ரத்தீஷ், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. மேலும் விக்ரம் ரவீந்திரன் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு அமலாக்கத் துறை சீல் வைத்தது.

அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும், வீட்டிற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என ஆகாஷ் பாஸ்கரன் , விக்ரம் ரவீந்திரன் இருவரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, டாஸ்மாக் முறைகேட்டில் இருவருக்கும் தொடர்பு இருப்பதாக அமலாக்கத் துறை தாக்கல் செய்த ஆவணங்கள் போதுமானதாக இல்லை என்று கூறி கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

இவ்வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், லட்சுமி நாராயணன் அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை நீதிபதிகள் படித்துப் பார்த்தனர். அமலாக்கத் துறை தரப்பில், “சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருக்கிறது என்று நம்புவதற்கு, சந்தேகிப்பதற்கு உரிய காரணங்கள் இருந்தாலோ அந்த இடங்களில் சோதனை நடத்துவதற்கு அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, “இந்த வழக்கைப் பொறுத்த வரை 41 முதல் தகவல் அறிக்கைகள் உள்ளன. அதன் அடிப்படையில் தான் இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன” என்றும் அமலாக்கத் துறை தெரிவித்தது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆதாரத்திற்கும், நீங்கள் முன்வைக்கும் வாதத்திற்கும் ஒத்துப்போகவில்லை என்று தெரிவித்தனர். வீட்டை சீல் வைப்பதற்கு அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்ப, “அமலாக்கத் துறைக்கு அதுதொடர்பான அதிகாரம் இல்லை. இதுகுறித்த நோட்டீஸை திரும்பப் பெறுகிறோம். ஆகவே, இதனை பதிவு செய்துகொண்டு வழக்கை முடித்து வைக்க வேண்டும். சோதனை செய்ய சென்ற இடத்தில் வீடு பூட்டி இருந்ததால் சீல் வைக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்களை திரும்ப ஒப்படைக்க தயார்’” என்று அமலாக்கத் துறை வாதம் வைக்கப்பட்டது.

சீல் வைக்க அதிகாரம் இல்லை என்னும்போது, அதனை திரும்பப் பெற்றுகொள்வதாகக் கூறியதற்கு எப்படி சலுகை காட்ட முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, பிரதான வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், இடைக்கால உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர். வழக்கின் விசாரணையும் நான்கு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சீல் வைக்க தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று அமலாக்கத் துறை கூறியுள்ளது அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

தகவல் : TAMILSAMAYAM

banner

You may also like

Leave a Comment