நாகப்பட்டினம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதை கண்காணித்து தடுக்கும் பணியில் தனிப்படை போலீசாரும், க்யூ பிரிவு போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.
வாகன சோதனை
இந்நிலையில் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் திருப்பூண்டியை அடுத்த மேலப்பிடாகை சேவுகராயர் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

300 கிலோ கஞ்சா
அப்போது கிழக்கு கடற்கரைசாலையில் வந்த இரண்டு கார்களை மறைத்து சோதனையிட்டனர் .
அந்த வாகனத்தில் 25 கிலோ அளவில் 12 சாக்கு மூட்டையில் 300 கிலோ கஞ்சாவை ஆந்திராவில் இருந்து நாகை வழியாக இலங்கைக்கு கடத்தி செல்ல இருந்ததாக தெரியவந்தது.
கஞ்சா பறிமுதல்
உடனே அவர்களுக்கு உதவியாக வந்த மூன்று இருசக்கர வாகனம் மற்றும் இரண்டு சொகுசு கார்கள் மற்றும் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து கீழையூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். தகவல் அறிந்த நாகப்பட்டினம் போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷிங் நேரில் சென்று பார்வையிட்டார்.
விசாரணை
போலீசார் விசாரணையில் கஞ்சாவை கடத்தியவர்கள் திருச்சி திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த அருள் ஆரோக்கியசாமி மகன் விக்னேஷ் (வயது 31), கத்தரிபுலம் பகுதியைச் சேர்ந்த ராமன் மகன் கோபிநாத் (33),
விழுந்தமாவடி பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் வீரமுரசு( 29), பிரதாபராமபுரம் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் (26), விழுந்தமாவடி பகுதியைச் சேர்ந்த காளிமுத்து மகன் வைரக்குமார் (33), கள்ளிமேடு பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் அரிகிருஷ்ணன் (29), கோயம்புத்தூர் பேரூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜன் மகன் சசிகுமார் (33), தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் சுதர்சன் (35), ஆகியோர் கஞ்சாவை இங்கிருந்து இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்தது.
8 பேர் கைது
இது குறித்து 8 பேர் மீதும் கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு சான்றிதழ்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வழங்கினார்.
தகவல் : TAMILSAMAYAM
