கிராம நிர்வாக அலுவலர் பாலதுரைசாமி கொடுத்த புகாரின் அடிப்படையில் போதை ஊசி போட தூண்டிய இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

கோவை போத்தனூர் இட்டேரி பகுதியில் சிறுவர்களை போதை ஊசி போட்டுக்கொள்ள தூண்டிய இம்ரான்கான், அபுபக்கர்சித்திக் என்ற இருவரை போத்தனூர் காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை போத்தனூர் இட்டேரி ஓடை பகுதியில் போதை ஊசி போட்டுக் கொள்வதற்காக கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் நேற்று மாலை போதை ஊசி போட்டுக்கொண்டுள்ளனர். போதையில் இருந்த அந்த இளைஞர்கள் இருவரும் அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவர்களை அழைத்து போதை ஊசி போட்டுக்கொள்ள தூண்டியுள்ளனர்.
இதைப்பார்த்த அப்பகுதிவாசிகள் போத்தனூர் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவல் கிடைத்த போத்தனூர் கிராம நிர்வாக அலுவலர் பாலதுரைசாமி தனது உதவியாளருடன் அங்கு சென்ற போது கார் மற்றும் போதை ஊசிகளையும், போதை ஊசி மருத்து தயாரிக்க பயன்படுத்தும் மாத்திரைகளையும் போட்டுவிட்டு தப்பி ஓடினர்.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பாலதுரைசாமி விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் போத்தனூர் சாய்நகர் பகுதியை சேர்ந்த இம்ரான்கான், அபுபக்கர்சித்திக் என்பது தெரியவந்தது. இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர்பாலதுரைசாமி போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தகவல் : NEWS18TAMIL
