திருவாரூரில் ஆடு மேய்க்க சென்ற பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே பெருமாளகரம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான பெண் தனியாக ஆடு மேய்க்க சென்றுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, அங்கு இருவர் வந்துள்ளனர். மது போதையில் இருந்த அந்த நபர்கள், தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீற முயன்றதாக கூறப்படுகிறது.
அந்த பெண் அவர்களிடம் இருந்து தப்பிக்க கடுமையாக போராடியுள்ளார். ஆனால், மதுபோதை தலைக்கேறிய நிலையில் இருந்த இருவரும், அந்த பெண்ணை பாண்டவையாற்றில் தள்ளி நீரில் மூழ்கடித்துள்ளனர். அங்கு ஆட்கள் வருவதை கண்டதும் அவர்கள் ஆற்றங்கரையில் இருந்து தப்பியோடியுள்ளனர். பின்னர், அருகே சென்று பார்த்த போது ஆடு மேய்க்க சென்ற பெண் மயக்க நிலையில் கிடந்துள்ளார்.
உடனே, அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கொரடாச்சேரி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டது திருவிடைவாசல் பகுதியை சேர்ந்த முருகன் மற்றும் அஜித்குமார் என்பது தெரியவந்தது.
தகவல் : NEWS18TAMIL
