ரயிலில் உள்ள டி3 பெட்டியில் 1 ஆம் நம்பர் சீட்டுக்கு அடியில் கஞ்சா பொட்டலங்கள் கேட்பாரற்று இருப்பதை போலீசார் பார்த்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் 6-ந்தேதியில் இருந்து தமிழகம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை நடந்தது. போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து போதைப்பொருள் குற்றவாளிகளை கைது செய்தனர். அந்த வகையில் கடந்த 1 மாதத்தில் போதைப்பொருள் வழக்கில் 9,500 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில் தற்போது கோவை வழியாக ஜார்க்கண்ட் மாநிலம் தன் பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா விற்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து கடத்தி வருவதாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து இன்று காலை 8:15 மணியளவில் கோவை வந்த ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை செய்தனர். இந்த சோதனையில் ரயிலில் உள்ள டி3 பெட்டியில் 1 ஆம் நம்பர் சீட்டுக்கு அடியில் கஞ்சா பொட்டலங்கள் கேட்பாரற்று இருப்பதை போலீசார் பார்த்தனர். பின்னர் 7 கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினர். இவற்றின் மொத்த எடை 7 கிலோ ஆகும்.
இதன் மதிப்பு ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் இருக்கும் என்று தெரிகிறது. விசாரணையில், ரயிலில் பயணம் செய்த யாரோ மர்ம நபர் வடமாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா பொட்டலங்களை கடத்திச் சென்றது தெரியவந்தது. அதன்படி போலீசார் சோதனை செய்ய வருவதை அறிந்த அவர்கள் கஞ்சா பொட்டலங்களை போட்டு சென்றதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து ரயில்வே போலீசார் கஞ்சா பொட்டலம் கடத்தி வந்த நபர் யார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தகவல் : ZEENEWS
