தலைமறைவாக இருக்கும் கோவை பிரபல ரெளடி கௌதமின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் கஞ்சா வழக்கில் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.கோவை நீதிமன்ற வளாகம் அருகே கடந்த மாதம் கோகுல் என்ற இளைஞர் கொலைசெய்யப்பட்டார். கஞ்சா விற்பனை, முன்பகை போன்ற காரணங்களுக்காக கோகுல் கொலைசெய்யப்பட்டார். இதனிடையே ரத்தினபுரி, கண்ணப்பநகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா, ரெளடிஸம் அதிகரித்துவருவதாகப் புகார் எழுந்தது.அடுத்தடுத்து வழக்குகளால் கௌதம் தலைமறைவாகியிருக்கிறார்.
இந்த நிலையில், கோவை மாநகர காவல்துறை வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த சூர்யபிரகாஷ் என்பவரை 450 கிராம் கஞ்சாவுடன் போலீஸார் பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரெளடி கௌதமின் மனைவி மோனிசா (21), மோனிசா சகோதரி தேவிஶ்ரீ (28), அவர் அம்மா பத்மா (48) ஆகியோர் மூலம் கஞ்சா விற்றது தெரியவந்தது.
மோனிசா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் காரிலிருந்து 1,500 கிராம் கஞ்சா, ரூ.4,000 பணம், கஞ்சா விற்ற பணத்தில் வாங்கப்பட்ட 10 பவுன் தங்கநகைகள், எடைபோடும் இயந்திரம், கார், இரு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.மூன்று பேரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். தலைமறைவாக இருக்கும் கௌதம் மீதும் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது குறித்து வீடியோ வெளியிட்டிருக்கும் கௌதம், “8 ஆண்டுகளுக்கு மேல் அடிதடி உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டிருக்கிறேன். திருமணமானதால் 4 ஆண்டுகளாக எதிலும் ஈடுபடாமல் வாழ்ந்துவருகிறேன்.
15 வழக்குகளில் 7 வழக்குகளில் வாரன்ட் இருப்பதால் என்னைச் சுட்டுப் பிடிப்போம் என்கின்றனர். எனக்கு யாரும் இல்லை என்பதால், மனைவியை மாமியார் வீட்டில் விட்டிருந்தேன். அவர் கர்ப்பமாக இருக்கிறார். தற்போது அவரையும், அவர் அம்மா, சகோதரியைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கின்றனர்.`உன்னை என்கவுன்ட்டர் செய்யப்போகிறார்கள். இதனால் போலீஸில் சரண்டர் ஆகாமல்… நீதிமன்றத்தில் சரணாகிவிடு’ என டிபார்ட்மென்ட்டிலிருந்தே சொல்கிறார்கள். என்னை முடிப்பதற்காக வெளியிலிருந்து பணம் கொடுத்து உதவுவதாக டிபார்ட்மென்டில் சொல்கிறார்கள். 7 வழக்குகளுக்காக சுட்டுப் பிடிப்பது எந்த விதத்தில் நியாயம். எனக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.நான் வாழ வேண்டும் என நினைக்கும்போது, இப்படிச் செய்வது நியாயமா… அடிதடி வழக்கு போடுவது சிரமம் என்பதால், திட்டமிட்டே கஞ்சா வழக்கு போட்டிருக்கின்றனர். என் பெயரைச் சொல்லி இதுவரை 50-க்கும் மேற்பட்டோரை ரிமான்ட் செய்திருக்கின்றனர். எனக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை” என்று கூறியிருக்கிறார்.
தகவல் : VIKATAN
