சென்னை: சென்னையில், மது குடிக்க கூடாது என்று அறிவுரை வழங்கிய தந்தையை மகன் கத்தியால் குத்திக்கொலை செய்தார். சென்னை எம்.ஜி.ஆர் நகர் சூளை பள்ளம் வெங்கட்ராமன் தெருவில் வசித்து வந்தவர் செல்வம்(48).
இவர் ஜாபர்கான்பேட்டை கல் மீன் வியாபாரம் செய்து வந்தார். இவரது மகன் பிரகாஷ்(21). பத்தாம் வகுப்பு படித்து முடித்துள்ள இவர் வேலைக்கு ஏதும் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். எப்பவாவது மட்டும் பெயிண்டிங் வேலைக்கு செல்வார் என்று கூறப்படுகிறது.

மேலும், மதுபோதைக்கு அடிமையான பிரகாஷ், மதுகுடிக்க பணம் கேட்டு அடிக்கடி தந்தையை நச்சரித்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ” மது உனது வாழ்க்கையை மட்டுமின்றி, மொத்த குடும்பத்தையும் சீரழித்து விடும். எனவே மது குடிப்பதை நிறுத்தி விட்டு வேலைக்கு செல்” என்று செல்வம் தனது மகனிடம் அடிக்கடி அறிவுரை வழங்கி வந்தார்.
ஆனால் தந்தையின் வார்த்தையை காதில் ஏற்றிக் கொள்ளாத பிரகாஷ் வழக்கம்போல் குடித்து விட்டு ஊர் சுற்றி வந்துள்ளார். இந்த நிலையில் இன்று வழக்கம்போல் மீன் வியாபாரம் முடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார் செல்வம். இதேபோல் வழக்கம்போல் குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார் பிரகாஷ். அப்போது செல்வம் குடியை நிறுத்தும்படி அறிவுரை கூறியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியுள்ளது. ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற பிரகாஷ், தந்தை என்றும் பாராமல் கத்தியை எடுத்து செல்வத்தின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த கொலை வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தந்தையை குத்தி கொலை செய்த பிரகாஷை கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மது என்னும் அரக்கன் தந்தையின் உயிரை பறித்து மகனை கொலைகாரனாக்கி உள்ளது. தமிழகத்தில் மதுபோதையில் இதுபோல் குற்றச் செயல்கள் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே தமிழகத்தில் மதுக்கடைகளை பாதியளவு குறைக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தகவல் : ONEINDIA
