Home Uncategorizedமதுபோதையில் அட்டகாசம் செய்த நபர் கல்லால் அடித்துக் கொலை.. மனைவி, மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு…

மதுபோதையில் அட்டகாசம் செய்த நபர் கல்லால் அடித்துக் கொலை.. மனைவி, மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு…

by bait
0 comments

அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு மெய்க்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

தேனி மாவட்டத்தில் மதுபோதையில் தாயை அடித்து துன்புறுத்திய தந்தையை கொலை செய்த வழக்கில், தாய், மகனுக்கு தேனி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.  

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள சிந்தளச்சேரியை சேர்ந்தவர் அந்தோணி ராஜா. இவரின் முதல் மனைவி லீமா ரோஸ் உயிரிழந்ததால், செலின் மேரி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராஜ்குமார் என்ற மகன் உள்ளார்.

மதுபோதைக்கு அடிமையான அந்தோணி ராஜா, நாள்தோறும் மது அருந்திவிட்டு வீட்டில் செலின் மேரியை அடித்து துன்புறுத்தி வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. வழக்கம்போல் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜுன் 8 ஆம் தேதி மது போதையில் வந்த அந்தோணி ராஜா, செலின் மேரியை அடித்ததாகத் தெரிகிறது.இதனால் ஆத்திரமடைந்த செலின் மேரி, மகன் ராஜ்குமாருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்ததாகவும், வீட்டுக்குச் சென்ற தாயுடன் சேர்ந்து தந்தை அந்தோணி ராஜாவை  கல் மற்றும்  கட்டையால் கொடூரமாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.இதில் பலத்த காயம் அடைந்த அந்தோணி ராஜா சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

banner

கொலை சம்பவம் தொடர்பாக தேவாரம் காவல் நிலையத்தில் தாய் மற்றும் மகன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.இந்நிலையில் வழக்கு விசாரணை முடிவடைந்து சாட்சியங்களின் அடிப்படையில் தாய் செலின் மேரி, மகன் ராஜ்குமார் ஆகிய இருவருக்கும் 14 ஆண்டுகால ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு மெய்க்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி கோபிநாதன் தீர்ப்பளித்தார். தொடர்ந்து தாய் – மகன் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 

தகவல் : KUMUDAM

You may also like

Leave a Comment