நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான கார் மோதியதில் மதுபோதையில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த சென்னை போக்குவரத்து புலனாய்புப் பிரிவு போலீஸார், ரேகா நாயரின் ஓட்டுநரை கைது செய்துள்ளனர். சென்னை ஜாஃபர்கான் பேட்டை பகுதியில் மதுபோதையில் சாலையில் படுத்துக் கிடந்த மஞ்சன்(வயது 55) என்பவர் மீது செவ்வாய்க்கிழமை கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் மஞ்சனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால், மஞ்சனை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் போலீஸார் கார் எண்ணை வைத்து ஓட்டுநர் பாண்டி என்பவரை கைது செய்துள்ளனர்.
அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் நடிகை ரேகா நாயரின் ஓட்டுநர் என்றும், அவர் ஓட்டிய கார் ரேகா நாயரின் பெயரில் பதிவு செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.
பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள ரேகா நாயர், 2022-ஆம் ஆண்டு பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். மேலும், விபத்து ஏற்பட்டபோது காரில் ரேகா நாயர் பயணித்தாரா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

தகவல் : DINAMANI
