ராஜபாளையம், ஜூலை 17: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள துரைசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் கார்த்திக் மணிகண்டன் (23), கணேசன் மகன் இசக்கிராஜா (40) உள்ளிட்ட சிலர், சத்திரப்பட்டி ரயில்வே மேம்பாலம் கீழ்புறம் உள்ள சாலையில், சில தினங்களுக்கு முன் அமர்ந்து ஒன்றாக மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது. இதில், ஒருவரை ஒருவர் மாறி, மாறி தாக்கிக்கொண்டனர்.
அப்போது கார்த்திக் மணிகண்டன் போதையில் கீழே விழ, அவர் மீது இசக்கிராஜா கலைப் போட்டுள்ளார். இதில், தலையில் பலத்த காயமடைந்த கார்த்திக் மணிகண்டன், ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த ராஜபாளையம் தெற்கு போலீசார், இசக்கிராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
தகவல் : DINAKARAN
