பொள்ளாச்சியில் குடிபோதையில் இரு நண்பர்கள் தங்களுடைய சக நண்பர் ஒருவரை அடித்து கொன்று சடலத்தை கழிவுகளுக்குள் போட்டு மறைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
பொள்ளாச்சியில் உள்ள நேதாஜி நகரை சேர்ந்தவர் தான் அருண் கார்த்திக், இவர் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில், அவர் சுமார் மூன்று நாட்களாகியும் வீட்டிற்கு திரும்பாதது அவரது பெற்றோரை பெரும் கவலைக்கு உள்ளாக்கியது.

அவர் காணாமல் போன மறுநாளே போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அருண் கார்த்திக் நண்பர்களிடம் தொடர்ச்சியாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் சூரிய பிரகாஷ் மற்றும் அரவிந்த் ஆகிய இருவரிடம் கேள்விகள் கேட்டபொழுது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த நிலையில் அவர்களை போலீசார் தீவிரமாக விசாரிக்க துவங்கினர். அப்பொழுதுதான் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியானது, கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி அருண் கார்த்திகை தங்களுக்கு இடையே உள்ள பண பிரச்சனை சம்பந்தமாக பேசுவதற்காக அழைத்துச் சென்றுள்ளனர், சூரிய பிரகாஷ் மற்றும் அரவிந்த் ஆகிய இரு நண்பர்கள்.
தனிமையாக அவர்கள் மூவரும் ஒரு இடத்திற்கு சென்று நிரம்ப மது குடித்த நிலையில் மூன்று பேருக்கும் மத்தியில் பெரும் வாக்குவாதம் துவங்கியுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் அரவிந்த் மற்றும் சூரிய பிரகாஷ் ஆகிய இருவரும் அருண் கார்த்திகை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் சம்பவ இடத்திலேயே அருண் கார்த்திக் உயிரிழந்துள்ளார், அவர் இறந்ததைக் கண்டு திடுக்கிட்ட அரவிந்த் மற்றும் சூரிய பிரகாஷ் ஆகிய இருவரும் அருகில் தனியாருக்கு சொந்தமாக இருந்த கல் குவாரி ஒன்றுக்கு அவருடைய பிரேதத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.
அங்கே கொட்டப்பட்டு இருக்கும் கழிவுகளுக்கு மத்தியில் அவர் உடலை புதைத்து விட்டு அங்கிருந்து அவர்கள் தப்பி உள்ளனர். போலீசாரின் தீவிர விசாரணையில் தற்பொழுது இந்த தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அந்த இருவரும் கைது செய்யப்பட கார்த்திக்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பண தகராறு காரணமாக நண்பர்களே தங்கள் சக நண்பனை கொலைவெறியோடு தாக்கி கொன்று, அவருடைய உடலை மறைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் : ASIANET NEWS
