
வேலூரில், “மருத்துவமனை சாலை மற்றும் பேருந்து நிலையங்களை ஆக்கிரமித்துக்கொண்டு செயல்படும் ஒன்பது டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்தக் கோரி, பலமுறை மனு அளித்தும், ஆட்சியாளர்கள் மது வருவாயில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள்’’ எனக் கொதிக்கிறார்கள் பொதுமக்கள்!
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும், சி.எம்.சி மருத்துவமனையையும் இணைக்கும் `காகிதப்பட்டறை’ பிரதான சாலையில், நான்கு டாஸ்மாக் கடைகள் அருகருகே செயல்படுகின்றன. ‘அங்கு மது வாங்க வருவோர், திறந்தவெளியில் உட்கார்ந்து குடிக்கின்றனர். இதனால், பெண்களும், பள்ளி-கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகளும் அச்சமடைகிறார்கள். குறிப்பாக, சி.எம்.சி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிட மிருந்து நகை, பணம், செல்போன் போன்றவற்றை அடித்துப் பறிப்பது போன்ற குற்றச் சம்பவங்களிலும் போதை ஆசாமிகள் ஈடுபடுகின்றனர். இத்தகைய குற்றங்களைத் தடுக்கவேண்டிய காவல் துறையினரும் அதைக் கண்டும் காணாமல் சென்றுவிடுகிறார்கள்’ எனக் கொதிக்கின்றனர் வேலூர் மக்கள்.
தகவல் : VIKATAN
