சென்னையில் போதை மருந்து, மாத்திரைகள் புழக்கம் இளைஞர்களிடையே அதிகமாக காணப்படுகிறது. ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து இத்தகைய மாத்திரைகளை குறைந்த விலைக்கு வாங்கும் கும்பல் கல்லூரி மாணவர்களை டார்கெட் செய்து அவர்களுக்கு அதிக விலைக்கு விற்பதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். குறிப்பாக இந்த சட்டவிரோத சம்பவத்தில் சில மருந்து விற்பனையாளர்களும் உடந்தையாக இருக்கின்றனர். இதனையெல்லாம் கண்டறிந்த போதை மருந்து தடுப்பு பிரிவு காவல்துறை போதை மாத்திரைகளை விற்பனை செய்பவர்களை பொறி வைத்து பிடித்துக் கொண்டிருக்கிறது.
இந்த விவகாரத்தில் லேட்டஸ்டாக கைது செய்யயப்பட்டிருப்பவர் ஹரிபிரசாத். அவருக்கு வயது 22. இவர் தனியார் கல்லூரியில் பார்மஸி நான்காம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வெளி மாநிலமான சூரத்தில் இருந்து ஆன்லைன் மூலம் போதை மாத்திரை, ஊசிகளை ஆர்டர் செய்து சென்னைக்கு வரவழைத்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் இவரது நண்பர் ஒருவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தலை வலிப்பதாக கூறியுள்ளார். தன்னிடம் மருந்து இருப்பதாக கூறி அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று போதை மாத்திரையை கரைத்து ஊசியில் ஏற்றி அவருக்கு செலுத்தியுள்ளார்.
இதனால் அவருக்கு மயக்கம் வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்னர் இதுக்குறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மதுரவாயில் காவல்துறை, போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த ஹரிபிரசாந்தை கைது செய்தனர். அப்போது, அவரிடம் இருந்த 200 போதை மாத்திரைகள் எட்டு போதை ஊசி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கஞ்சா, போதை வஸ்துகளுக்கு அடிமையான இளைஞர்கள் அவை கிடைக்காதபோது போதை ஊசிகள் மற்றும் மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர். இது அவர்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை அறியாமலேயே இந்தவலைக்குள் சிக்கிக் கொள்கின்றனர். இதனை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுத்தாலும், சட்டவிரோத வழிகளில் இந்த மாத்திரைகளைப் பெற்று இளைஞர்களிடம் விற்பனை செய்கின்றனர்.

தகவல் : ZEENEWS
