சென்னையில் போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் நடிகர் சிம்புவின் முன்னாள் உதவியாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சினிமா பிரபலங்களுக்கு உயர்ரக கஞ்சா வழங்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. போதைப்பொருள் வழக்கில் போலீசாரிடம் அடுத்து சிக்கப்போகும் சினிமா பிரபலங்கள் யார்?.

நடிகர் சிம்புவிடம் உதவியாளராக இருந்தவர் ஷர்புதீன். சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தில் இணைத் தயாரிப்பாளராகவும் இவர் இருந்தார். உயர்ரக கஞ்சா வைத்திருந்ததாக ஷர்புதீன் கைது செய்யப்பட்டு இருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஷர்புதீன் கொடுத்த தகவலின்பேரில் அதிமுக நிர்வாகிகள் சிலரிடமும் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். ஷர்புதீனுக்கும் அதிமுகவினருக்கும் உள்ள தொடர்பு என்ன? நள்ளிரவில் காவல் நிலையத்தை அதிமுகவினர் முற்றுகையிட்டது ஏன்?.
சென்னை திருமங்கலம் பகுதியில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாக தகவல் அறிந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையில் இறங்கினர். இதில் அதே பகுதியை சேர்ந்த தியாகேஸ்வரன் என்பவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் உயர்ரக கஞ்சா விற்பனை செய்வது தெரியவரவே, யாருக்கெல்லாம் விநியோகம் செய்து இருக்கிறார் என விசாரித்துள்ளனர். அதில், சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சரத், முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன், ஆந்திராவைச் சேர்ந்த ஷர்புதீன் முகமது மஸ்தான் ஆகியோருக்கு விலையுயர்ந்த ஓஜி கஞ்சா விற்பனை செய்தது தெரிந்தது.
தகவல் : NEWS18TAMIL
