பன்னர்கட்டா: பட்டப்பகலில் பெங்களூரு சாலையில் இளம்பெண்ணுக்கு கஞ்சா போதையில் இருந்த வாலிபர்கள் பாலியல் தொல்லை கொடுத்து தாக்கிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு, மைலசந்திரா ரேணுகா எல்லம்மா லே – அவுட்டில் வசிக்கும் 25 வயது இளம்பெண், நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு மளிகை கடைக்கு சென்று வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை ஐந்து வாலிபர்கள் வழிமறித்து சூழ்ந்து கொண்டனர்.
அவர்கள் போதையில் இருப்பதை உணர்ந்த இளம்பெண், அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். ஐந்து வாலிபர்களும் சேர்ந்து, இளம்பெண்ணின் கையை பிடித்து இழுத்ததுடன், பாலியல் தொல்லையும் கொடுத்தனர்.
கோபமடைந்த அப்பெண், இரு வாலிபர்களின் வயிற்றில் ஓங்கி மிதித்தார். ஆத்திரம் அடைந்த அவர்கள், இளம்பெண்ணை தாக்கினர். ஒரு வழியாக வாலிபர்களிடம் இருந்து இளம்பெண் தப்பி ஓடினார். அவரை விரட்டிக் கொண்டே, வாலிபர்களும் வந்தனர்.
இதை பார்த்த அப்பகுதியினர், இளம்பெண்ணை மீட்டு ஒரு வீட்டிற்குள் அனுப்பி வைத்தனர். வாலிபர்களை பிடிக்க முயன்றனர். கோபம் அடைந்த வாலிபர்கள், இளம்பெண்ணை காப்பாற்றியவர்களையும் தாக்க முயன்றனர். வாலிபர்கள் கஞ்சா போதையில் இருந்தது தெரிந்தது.
தகவல் : DINAMALAR
