புதுச்சேரியில் கமிஷனுக்கு கஞ்சா கைமாற்ற முயன்ற 6 பேர் கும்பல் போலீசாரிடம் சிக்கியுள்ளது.

புதுச்சேரி முதலியார்பேட்டை காவல்நிலைய பகுதிக்கு உட்பட்ட 100 அடி சாலையில், மேம்பாலம் ஒன்றின் கீழ் சுமார் 7 பேர் கஞ்சா பண்டல்களை கைமாற்றுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த முதலியார்பேட்டை போலீசார் அப்பகுதியில் மறைமுகமாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கஞ்சா பொட்டலங்களை மாற்றுவதற்காக வந்த 6 பேரை சுற்றி வளைக்க, ஒருவர் மட்டும் தப்பியோடினார்.
பின்னர் பிடிபட்டவர்கள் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அசாருதீன், ஷாரூக்கான், மனோஜ் குமார், ராஜீவ் காந்தி, அப்துல்கலாம். செந்தில்குமார் என்பது தெரியவந்தது. தப்பி ஓடிய நபரின் பெயர் அலெக்ஸ் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 45 கிலோ கஞ்சா பண்டல்கள், 2 கார்கள், ஒரு பைக், 7 செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், கஞ்சா விற்பனைக்கு கேரளாவைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி சேட்டா பிரேம்குமார் என்பவர் முக்கிய மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. 1 கிலோ கஞ்சாவை கைமாற்றினால் 1,000 ரூபாய் தருகிறேன் என்று சேட்டா பிரேம்குமார் கூறியதாக சிக்கியவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
தகவல் : NEWS18TAMIL
