சென்னை: சென்னை எழும்பூரில் பாருக்குள் செல்ல அனுமதி கேட்டு மதுபோதையில் 3 பெண்கள் தகராறு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அநாகரிகமாக நடந்துகொண்டதோடு, பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்துள்ளனர்.
சென்னை எழும்பூர் லாங்க்ஸ் கார்டன் சாலையில் உள்ள மதுபான பார் அருகே நேற்று இரவு பெண்கள் சிலர் கத்தி சத்தம் போட்டு கொண்டு இருந்ததாகவும், பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் நடந்துகொள்வதாகவும் எழும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அநாகரீகமாக நடந்துகொண்டதோடு, சாலையில் செல்லும் பொதுமக்களிடமும் ஆபாசமாக பேசி இடையூறாக அத்துமீறி நடந்து கொண்டதால் அங்கு நின்றவர்களும் முகம் சுளித்தனர். மூன்று பெண்களும் தொடர்ந்து எல்லை மீறி நடந்து கொண்டதால் போலீசாருக்கு அங்கு இருந்தவர்கள் தகவல் கொடுத்தனர்.
இந்த தகவலின் பேரில் எழும்பூர் போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது மதுபோதையில் 3 பெண்கள் தகராறு செய்து வந்தனர். அவர்கள் பார் உள்ளே செல்ல அனுமதி கேட்டும், அதற்கு பார் உரிமையாளர் அனுமதி கொடுக்காததால் தொடர்ந்து 2 மணி நேரமாக அங்கு தொல்லை கொடுத்து வந்ததும் தெரியவந்தது. மேலும் சாலையில் சென்று கொண்டிருந்தவர்களிடமும் பேச்சு கொடுத்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த 3 பெண்களையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் மது போதையில் தகராறில் ஈடுபட்டவர்கள் கென்யா நாட்டை சேர்ந்த பெண்கள் என்பது தெரியவந்தது. விஜினியா, அன்ஸ்தடியா மற்றும் போசியா மூவந்தை என்பது தெரியவந்தது. தொடர்ந்து அந்த பெண்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது:-
கென்ய நாட்டை சேர்ந்த 3 பெண்களும் மருத்துவ காரணத்திற்காக சென்னை வந்துள்ளனர். சென்னை தி நகரில் உள்ள அப்பார்ட்மெண்டில் தங்கியுள்ள இந்த 3 பெண்களும், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். நேற்றும் அவர்கள் சிகிச்சைக்கு வந்த நிலையில், அதன்பிறகு ஆயிரம் விளக்கு பகுதியில் ஒரு பாரில் மது அருந்தியுள்ளனர்.
தொடர்ந்து சென்னை எழும்பூர் வந்த அவர்கள் அங்கும் மதுபான பாருக்குள் செல்ல வேண்டும் என்று கூறி அடம்பிடித்துள்ளனர். அப்போது அந்த பெண்களை உள்ளே அனுமதிக்காததால் தொடர்ந்து 2 மணி நேரமாக அங்கேயே நின்று தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கென்யா நாட்டை சேர்ந்த 3 பெண்களையும் கைது செய்தனர். அவர்கள் மீது ஆபாசமாக பேசுதல், சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தகவல் : ONEINDIA
