Home Uncategorizedநாமக்கலில் மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பு… அதிர்ச்சி தகவல்

நாமக்கலில் மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பு… அதிர்ச்சி தகவல்

by bait
0 comments

நாமக்கல் மாவட்டத்தில் மாணவர்களிடையே போதைப்பழக்கம் அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் மாணவர்கள் மத்தியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

புகையிலை விற்பனைக்குத் தடை
பொதுவாக பள்ளி, கல்லூரி அருகே உள்ள பெட்டிக் கடைகளில் போதை பொருட்கள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிகரெட், பீடி, புகையிலை போன்றவை விற்பனைக்கு மாநில அரசு தடை விதித்திருக்கிறது.

இதை மீறும் பெட்டிக் கடை உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. இருந்தாலும், புற்றீசல் போல இப்போது ஆங்காங்கே பெட்டிக் கடைகள் திறக்கப்பட்டு போதை பொருள் விற்பனை நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

21 % மாணவர்கள் புகையிலைக்கு அடிமை
இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருக்கின்றனர். அந்த வகையில் நாமக்கல்லில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழக சுகாதாரத் துறையே இந்த ஆய்வை நடத்தியது. அதாவது நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் போது ஏறத்தாழ 21% மாணவர்கள் புகையிலை பயன்படுத்துவது தெரிய வந்திருக்கிறது. இந்த தகவல் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

அதிலும் குறிப்பாக 13 வயது மாணவர்கள் மத்தியில் போதைப் பழக்கம் அதிகரித்திருப்பது தான் ஹைலைட். இது தொடர்பாக சுகாதார துறை அதிகாரி டாக்டர் அர்ஜுன் கூறியதாவது:

கொரோனா பொது முடக்கக் காலத்தில்…
பெரும்பாலான மாணவர்கள் 3 முதல் 4 ஆண்டுகள் வரை புகையிலையைப் பயன்படுத்தி வருகின்றனர். கொரோனா பொது முடக்கக் காலத்தில் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகளாக மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையானதால், இது நீண்ட காலத்திற்கு அவர்களது உடல் நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.

300 மாணவர்களிடம் சர்வே
முன்னதாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை நாமக்கல் மாவட்டம் எர்ணாபுரம் பிளாக் பகுதியில் உள்ள சுமார் 300 மாணவர்களிடம் இந்த சர்வே நடத்தப்பட்டது. மாணவர்களிடம் ரகசியமான முறையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 12 பெண்கள் உட்பட சுமார் 63 பேர் தாங்கள் போதைப் பொருளுக்கு அடிமையாக இருப்பதாக தெரிவித்தனர். அதிலும் 52 பேர் போதை பொருளை பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

ரகசியமான முறையில் ஆய்வு
இதுகுறித்து இந்த ஆய்வை நடத்திய டாக்டர் லலிதா என்பவர் கூறும் போது, “முதலில் மாணவர்களிடம் காகிதத்தில் வினாக்களை எழுதி பதிலளிக்குமாறு தான் கேட்டுக் கொண்டோம். ஆனால் அவர்கள் தங்களுக்கு களங்கம் ஏற்பட்டு விடும் என்ற எண்ணத்தில் அவ்வாறு பதில் அளிக்க மறுத்துவிட்டனர். பின்னர் நேரடியாக ரகசியமான முறையில் நாங்கள் போதை பொருளுக்கு ஆளானதை தெரிவித்தனர்” என்று கூறினார்.

19% பேர் சிகரெட்; 5% பேர் பீடி
தமிழகத்தில் பெரும்பாலானோர் புகையிலையைத் தான் பயன்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த வகையில் 76 சதவீதம் பேர் புகையிலையையும், 19% பேர் சிகரெட்டையும், 5% பேர் பீடியையும் பயன்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்தது.

புகையிலை பொருட்கள் விலை குறைவு
மேலும் புகை இல்லாத போதை பொருட்களை பயன்படுத்துவதை எளிது என்பதால், மாணவர்கள் அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து பள்ளி வகுப்பறைக்கு போதை பொருட்களை கொண்டு செல்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். மேலும் இது போன்ற புகையிலை பொருட்கள் விலை குறைவாகவும் பள்ளிகளுக்கு அருகே உள்ள கடைகளிலும் கிடைப்பதால் அவர்கள் எளிதில் வாங்கி செல்வதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவித்தனர்.

தகவல் : TAMILSAMAYAM

banner

You may also like

Leave a Comment