Home Uncategorizedதுணை ஜனாதிபதி பாதுகாப்பை மீறி நுழைந்த மொபட்; மது போதை வாலிபர் கைது

துணை ஜனாதிபதி பாதுகாப்பை மீறி நுழைந்த மொபட்; மது போதை வாலிபர் கைது

by bait
0 comments

கோவை: இந்திய துணை ஜனாதிபதியாக கடந்த மாதம் பொறுப்பேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் முதன்முறையாக நேற்று கோவை வந்தார். கொடிசியா வளாகத்தில் நடந்த தொழில்துறையினர் பாராட்டு விழாவில் அவர் பங்கேற்றார். தொடர்ந்து டவுன்ஹால் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த செல்ல இருந்தார். இதையடுத்து ரேஸ்கோர்ஸ், உக்கடம், டவுன்ஹால் பகுதியில் பேரிகார்டு அமைத்து அந்த பகுதிகளில் தடை விதிக்கப்பட்டிருந்தது.

மாநகராட்சி அலுவலகம் முன்புள்ள ரோட்டில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மொபட்டில் வந்த 2 வாலிபர்கள், பேரிகார்டு தடுப்புகளை தாண்டி டவுன்ஹால் நோக்கி அத்துமீறி நுழைந்தனர். இதனால் பதற்றமடைந்த போலீசார், அவர்களை நிறுத்த முயன்றும் அதிவேகமாக சென்றனர். சிறிது தூரத்தில் எதிரே சென்ற பைக் மீது மோதி நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அதில் பைக்கில் வந்த குனியமுத்தூரை சேர்ந்த பிரதீப் குமார் (40) என்பவர் காயமடைந்தார். அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதற்கிடையில் இருவரும் தப்பி ஓட முயன்றனர். அவர்களில் ஒருவர் மட்டும் சிக்கினார். அவரை சோதனை செய்து அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். மது போதையில் இருந்தது தெரியவந்தது. சிறிது நேரம் கழித்து நடத்தப்பட்ட விசாரணையில், மொபட்டை ஓட்டி வந்தது கரும்புக்கடை எம்சிஆர் நகர் 4வது வீதியை சேர்ந்த முகமது ஆஷிக் (27) என்பதும், மற்றொருவர் கரும்புக்கடையை சேர்ந்த அனீஸ் ரகுமான் (22) என்பதும் தெரியவந்தது. இருவர் மீதும் 6 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் முகமது ஆஷிக்கை கைது செய்தனர். அவர்கள் மது போதையில் அத்துமீறினார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தகவல் : DINAKARAN

banner

You may also like

Leave a Comment