திருப்பூர் அருகே அரசுப் பள்ளி வளாகத்துக்குள் அமர்ந்து மது அருந்தியவர்களைத் தட்டிக் கேட்ட ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள காரத்தொழுவில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் முகமது குலாம் தஸ்தகீர் (46) என்பவர் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் புதன்கிழமை மாலை பள்ளி முடிந்த பின், சுமார் 5 மணி அளவில் பள்ளி வளாகத்துக்குள் நான்கு பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர்.இதைப் பார்த்த ஆசிரியர் முகமது குலாம் தஸ்தகீர், அவர்களிடம் பள்ளி வளாகத்துக்குள் மது அருந்தக் கூடாது என எச்சரித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, அங்கிருந்து சென்ற நான்கு பேரும், சிறிது நேரம் கழித்துத் திரும்பி வந்துள்ளனர். அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்த ஆசிரியர் முகமது குலாம் தஸ்தகீர் முகத்தில் பெட்ரோலை ஊற்றி விட்டு ஓடித் தப்பிவிட்டனர்.அதில், ஆசிரியர் முகமது குலாம் தஸ்தகீர் கண், வாய், மூக்கு ஆகியவற்றுக்குள் பெட்ரோல் பட்டதால், அவர் அலறி துடித்துள்ளார். இதையறிந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.இதுதொடர்பாக கணியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய நான்கு பேரைத் தேடி வருகின்றனர்.
தகவல் : VIKATAN
