திருச்சி அருகே மது போதையில் குட்டியானை ஓட்டி சென்றவர் எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இருசக்கர வாகனத்தில் சென்ற வங்கி கிளை மேலாளர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் அரியமங்கலம் அடுத்து கைலாஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் மின்வாரியத்தில் இருந்து ஓய்வு பெற்ற கனகராஜ் மகன் கிள்ளிவளவன் வயது 45 என்பவர். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் இருக்கின்றனர். இவர் லால்குடி அருகே உள்ள ஒரு தனியார் வங்கி கிளை மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் கிள்ளிவளவன் வழக்கம் போல் நேற்று வங்கி பணி முடித்து விட்டு லால்குடியில் இருந்து அரியமங்கலம் கைலாஷ்நகரில் உள்ள அவரது வீட்டிற்கு ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் பாதுகாப்பாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது திருச்சியில் இருந்து லால்குடி நோக்கி மதுபோதையில் அரியமங்கலத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் குட்டி யானை ஒன்றை ஓட்டி வந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை
அப்போது திடீரென எதிரே இருசக்கர வாகனத்தில் வந்தவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இரு சக்கர வாகனத்தில் ஓட்டி வந்த தனியார் வங்கி கிளை மேலாளர் கிள்ளிவளவன் படுகாயம் அடைந்தார். மேலும் அவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் அப்பளம் போல் நொறுங்கியது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக கிள்ளிவளவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்தில் மது போதையில் இருந்த கார்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவல் : TAMILSAMAYAM
