தர்மராஜ்ஜை கொலை செய்த குடும்பத்தார் அதை மறைக்க வயலிலேயே அவரது உடலை தீவைத்து எரித்துள்ளனர்.

போதைக்கு அடிமையான நபரை அவரது குடும்பத்தினரே அடித்து கொலை செய்து தீவைத்து எரித்த அதிர்ச்சி சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னாவில் உள்ள அம்பத் தாலுகா பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ். 35 வயதான இவருக்கு திருமணமாகி நிர்குன் என்ற மகன் உள்ளார்.
தீவிர மது, கஞ்சா போதைக்கு அடிமையான தர்மராஜ், தனது தந்தை நாராயண் சகோதரர் கரண்ராஜ் ஆகியோருடன் இணைந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சமீபகாலமாக தர்மராஜ் தினம்தோறும் போதையுடன் வந்து வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். வீட்டார் கண்டித்து பார்த்தும் அவர் தனது செயலை மாற்றிக்கொள்வதாக இல்லை.
இது அவரது வீட்டாருக்கு பெரும் தொந்தரவாக மாறி எரிச்சலடையவைத்துள்ளது. சம்பவ நாளான கடந்த மே 15ஆம் தேதி அன்று தர்மராஜ் வழக்கம் போல கடுமையான போதையில் இருந்துள்ளார். அப்போது தர்மராஜ்ஜின் தந்தை, சகோதரர், மகன் ஆகியோர் வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அவர்களிடம் தர்மராஜ் போதையில் தகராறு செய்துள்ளார்.
அப்போது வாக்குவாதம் முற்றி அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. தர்மராஜ் மீதான ஆத்திரத்தில் அம்மூவரும் அவரை கையில் இருந்த கழி கம்புகளை வைத்து கடுமையாக அடித்து தாக்கியுள்ளனர். கடுமையான தாக்குதலுக்கு ஆளான தர்மராஜ் சம்ப இடத்திலேயே உயிரிழந்தார். பதறிப்போன மூவரும் விஷயத்தை மூடி மறைக்க திட்டமிட்டு வயலிலேயே வைத்து தர்மராஜின் உடலை எரித்துள்ளனர்.
தகவல் : NEWS18TAMIL
