Home Uncategorizedடாஸ்மாக்கிற்கு எதிராக போராடுவது குற்றம் கிடையாது : நீதிபதி வேல்முருகன் அதிரடி உத்தரவு!

டாஸ்மாக்கிற்கு எதிராக போராடுவது குற்றம் கிடையாது : நீதிபதி வேல்முருகன் அதிரடி உத்தரவு!

by bait
0 comments

டாஸ்மாக் போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்கிற்கு எதிராக போராட்டம் நடத்துவது குற்றம் இல்லை என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலமாக அரசே மதுபானம் விற்பனை செய்து வருகிறது. ஆனால், பொது மக்கள் புழங்கும் இடத்தில் டாஸ்மாக் கடைகளை அமைக்க தொடர்ச்சியாக எதிர்ப்புகள் இருந்து வருகின்றன. டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பெண்கள் வெகுண்டு எழுந்து போராட்டங்கள் நடத்தியதும் கடந்த காலங்களில் நடந்துள்ளன.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என மக்கள் அதிகாரம் அமைப்பினர் கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் உரிய அனுமதி இல்லாமல் நடைபெற்றதாகவும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகிகள் முருகானந்தம், மனிமாறன் ஆகியோர் மீது சேத்தியாதோப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இவ்வழக்கில் சிதம்பரம் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என முருகானந்தம் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்திருந்தது. உள்ளூர் மக்களின் நலன் கருதி டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. போராட்டத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாத நிலையிலும், யாரும் புகார் தெரிவிக்காத நிலையிலும் போலீசார் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்” என்று வாதம் வைத்தார்.

காவல் துறை தரப்பில், “சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வகையில், எந்தவித அனுமதியும் வாங்காமல் போராட்டம் நடைபெற்றது. சட்டம் – ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டே வழக்குப் பதிவு செய்யப்பட்டது” என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

டாஸ்மாக் போராட்டத்தை குற்றச் செயலாக கருத முடியாது

வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, “குடியிருப்புப் பகுதிகளில் இயங்கும் டாஸ்மாக் கடைகள் உண்டாக்கும் சமூகப் பிரச்னைகள் குறித்து பொதுமக்கள், குறிப்பாக அப்பகுதியை சேர்ந்த பெண்கள் நியாயமான கவலைகளை எழுப்பும் சூழலில், அமைதியான போராட்டங்களை குற்றச் செயல்களாக கருத முடியாது. ஆட்சியில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரை சமயங்களில் டாஸ்மாக் கடைகளை குறைப்பதாக வாக்குறுதிகள் அளிக்கின்றன. ஆனால், உண்மையில் ஒரு கடை மூடப்படுவதற்கு பதிலாக அது வேறு இடத்திற்கு மாற்றப்படுவதால் முக்கியமான பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. இதுபோன்ற அமைதியான போராட்டங்களில் பங்கேற்கும் ஒவ்வொரு தனி நபருக்கும் எதிராக காவல் துறை குற்றவியல் வழக்குப் பதிவு செய்தால், அது ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக அமையும்.

வழக்கை ரத்து செய்து நீதிபதி அதிரடி

இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால், மாநிலம் முழுவதும் இதேபோன்ற ஆர்பாட்டங்களில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான பெண்கள் மீதும் வழக்கு தொடர வேண்டிய நிலை உண்டாகும். பொது சுகாதாரம் மற்றும் சமூக நலன் தொடர்பான விஷயங்களில் அமைதியான போராட்டம் அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்ட ஒன்றாகும்.

போராட்டங்கள் அமைதியானதாகவும், வன்முறை அற்றதாகவும் தொடர்ந்தால், பொது மக்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தவும், அரசிடம் இருந்து உரிமைகளைப் பெறவும் முடியும்” என்று விரிவாக கருத்துகளைத் தெரிவித்தார். மேலும், சிதம்பரம் நீதிமன்றத்தில் உள்ள வழக்கையும் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டார்.

banner

தகவல் : TAMILSAMAYAM

You may also like

Leave a Comment