ஓசூர், ஜூலை 19: சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை சார்பில் கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். சூளகிரி இன்ஸ்பெக்டர் சையது சுல்தான் பாட்ஷா, அரசு பள்ளி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பேரணியில் கலந்துகொண்டு, மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றிய வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்திக் கொண்டு, தொடாதே தொடாதே மதுவை தொடாதே, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர் என்று கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.
மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றிய துண்டு பிரசுரங்களை வணிகர்கள், பொதுமக்களுக்கு வழங்கினர். நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்ற பேரணி, மீண்டும் சூளகிரி அரசு பள்ளியில் நிறைவடைந்தது. தொடர்ந்து மாணவர்கள் போதை பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றனர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் மகாதேவன், ஆங்கில ஆசிரியர் சுரேஷ், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தகவல் : DINAKARAN
