ராஜபாளையம் அருகே கஞ்சா விற்பனையில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கஞ்சா விற்பனை செய்வதில் தகராறு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முகவூர் கிராமத்தில் உள்ள இருளப்பசாமி கோயில் தெருவை சேர்ந்தவர் சூரிய பிரகாஷ் (24). இவர் அவ்வப்போது கஞ்சா மற்றும் குடிபோதையில் அப்பகுதியில் தகராறில் ஈடுபடுவது வாடிக்கை. அதனால் இவர் மீது தளவாய்புரம் காவல் நிலையத்தில் சில வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முகவூர் இருளப்பசாமி கோயில் தெரு பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்பில் உள்ள சில இளைஞர்களுக்கும் சூரிய பிரகாஷுக்கும் கஞ்சா விற்பனை செய்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சூரிய பிரகாஷ் வீட்டிற்கு சில நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
கும்பல் சண்டை
அதனால் ஆத்திரமடைந்த சூரிய பிரகாஷ், மற்றொரு தரப்பைச் சேர்ந்த இளைஞர்கள் சில பேரை வழிமறித்து தகராறு ஈடுபட்டதாகவும் அப்போது ஒரு இளைஞரை தாக்கி கழுத்தில் கயிறை போட்டு இறுக்கி கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது.
அதனைக் கண்ட அப்பகுதியில் இருந்த மக்கள் உடனடியாக அவர்களை விரட்டியுள்ளனர். இவ்வாறாக இந்த பிரச்சனை சென்று கொண்டுள்ள நிலையில் இன்று சூரிய பிரகாஷ் அவரது சித்தப்பா குருசாமி (48) என்பவருடன் தனது இரு சக்கர வாகனத்தில் முகவூர் கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளார்.
சுற்றி வளைத்து அரிவாள் வெட்டு
அந்த சமயத்தில் முகத்தில் முகமூடி அணிந்து கொண்டு வந்த நான்கு இளைஞர்கள் சூரிய பிரகாஷை கழுத்து மற்றும் முகப்பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளனர். அதனை தடுக்க சென்ற சித்தப்பா குருசாமிக்கும் தோள்பட்டை மற்றும் கைகளில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.
இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்ததை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தளவாய்புரம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலை அறிந்ததும் விரைந்து வந்த காவல் துறையினர் அவர்கள் இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்துள்ளனர்.
சம்பவ இடத்தில் பலி
ஆனால் சூரிய பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதனை அடுத்து அவரது சித்தப்பா குருசாமியை காவல் துறையினர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். உயிரிழந்த சூரிய பிரகாஷ் உடலை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்கள் மத்தியில் மோதல் ஏற்பட்ட நிலையில் கஞ்சா விற்பனையில் தகராறு ஏற்பட்டு இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக ராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரித்தி தலைமையில் காவலர்கள் தீவிரமாக குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் நள்ளிரவில் சுமார் ஏழு இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
மூவர் கைது
அந்த விசாரணையில் செட்டியார்பட்டி கொமந்தபுரம் நாயுடு தெருவை சேர்ந்த கருப்புசாமி மற்றும் அவரது நண்பர்கள் ஆன முருகேசன், பாலமுருகன் ஆகிய மூன்று பேரும் தாங்கள் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து அந்த மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
தகவல் : TAMILSAMAYAM
