ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்துள்ள நிலையில், அந்நாட்டு வீரர்கள் மது அருந்தி கும்மாளம் அடித்ததாக எழுந்துள்ள புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளுக்கு இடைப்பட்ட ஓய்வு நேரத்தில், இங்கிலாந்து வீரர்கள் பிரிஸ்பேனில் உள்ள ஒரு உல்லாச விடுதிக்கு சென்றுள்ளனர். அங்கு வீரர்கள் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக தகவல் வெளியானதை அடுத்து, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் ராப் கீ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து பேசிய ராப் கீ, “வீரர்கள் இரவு உணவின் போது ஒரு கிளாஸ் வைன் அருந்துவதில் எனக்கு பிரச்சனையில்லை. ஆனால், ஒரு தேசிய அணி வரம்பு மீறி மது அருந்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
நியூசிலாந்து தொடரின் போதே இது போன்ற நிகழ்வுகள் குறித்த விழிப்புணர்வு எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

தகவல் : WEBDUNIA
